வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்


வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்:-


இந்தியாவின் மன்னர் பரம்பரையினர், போர் வீரர்கள் தம்மை சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம் என்று கூறிக்கொண்டனர். அந்த மரபின் படியே வன்னியர்கள் தம்மை அக்னி வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில், வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள் என்பது நம்பிக்கை ஆகும்.

வன்னியர் சின்னம்
‘அக்னி வம்சம்’ என்கிற கருத்தாக்கம், அதாவது 'யாகத்தீயில் இருந்து அவதாரம் எடுக்கும் நிகழ்வு' புறநானுறு காலத்தில் இருந்தே தமிழர் வரலாற்றில் உள்ளது. ("நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றி" - நீ வடபால் முனிவன் யாகக் குண்டத்தில் தோன்றியவன் - என்கிறது புறநானூறு பாடல் 201)  
வல்லாள மகராஜன், திருவண்ணாமலை
அருணாச்சல புராணம் திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகராஜனை, "மூவகையுள் வன்னி குலத்தினில் வரு மன்னா" என்கிறது. வில்லிபாரதம் சோழர்களை சூரிய வம்சம், பாண்டியர்களை சந்திரவம்சம், சேரர்களை அக்னி வம்சம் என்று குறிக்கிறது.

‘சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்பும் - விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பும்’ தமிழ்நாட்டில் வன்னியர்கள் மற்றும் அக்னி வம்சம் குறித்த கருத்துக்கள் மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் வடதமிழ்நாடு 'வன்னியர் ராஜ்யம்' என்று பெயர்பெற்றிருந்தது. வன்னிய நாட்டை வெற்றி கொள்வதும், வன்னிய ராஜாக்களை வெல்வதும் விஜயநகரப் படையெடுப்பின் நோக்கம் என்று கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் சமஸ்கிருத காவியம் குறிப்பிடுகிறது. அதே போன்று இலங்கையிலும் வன்னியர் ஆட்சி சிறப்பு பெற்றிருந்ததை இலங்கையின் வையா பாடல் குறிப்பிடுகிறது.
திரௌபதி, பெங்களூர்
இதே போன்று, வன்னிய புராணத்திலும், வைத்தீஸ்வரன் கோவில் கல்வெட்டிலும், கம்பரின் சிலை எழுபது பாடலிலும், இலங்கையின் வையா பாடலிலும் 'வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள்' என்கிற செய்தி கூறப்பட்டுள்ளது. அக்னியில் தோன்றிய சத்திரியர்களான வன்னியர்கள் தீயில் தோன்றிய தெய்வமான திரௌபதியை வழிபடுகின்றனர். இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத பழக்கம் ஆகும்.

வன்னிய ராஜன் கதை

வன்னிய புராணம் என்பது தமிழக மன்னர்கள் நடத்திய மாபெரும் போர்களின் தொகுப்பு.பாதாமியிலிருந்து ஆட்சி செய்த சாளுக்கிய மன்னன் புலிகேசியை பல்லவ மாமன்னன் நரசிம்மவர்ம பல்லவன் வெற்றிக்கொண்ட கதை இதில் முதன்மையானது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். (நரசிம்மவர்ம பல்லவன் வரலாறு கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலிலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படத்திலும் கூறப்பட்டுள்ளது).

மக்களுக்கு துன்பம் விளைவித்த வாதாபி சூரனை அழிப்பதற்காக, சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்புத் துளியை, சம்பு முனிவர் செய்த யாகத்தில்  விழுச்செய்தார். அக்னி குண்டத்திலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் உதயமானவர் வீர வன்னிய மகாராஜா.
'ஓம குண்டத்தில் தோன்றிய போது தலையில் மகுடமும், கையில் வில்லும் கேடயமும் வேலும்... தோளில் அம்புகளும் அம்பறாத் தூணியும்... கட்டாரியும், வாளும், செங்கழுநீர் மாலையும் அணிந்து வீரவன்னிய ராஜன் தோன்றினான்' என்கிறது 'வீர வன்னியர் கதை - வன்னிய புராண வசனம்' எனும் நூல்.

சம்பு முனிவர் செய்த யாகத்திலிருந்து வீர வன்னிய மகாராஜா தோன்றிய நாள் பங்குனி உத்திரம். யாகம் நடந்த இடம் திருவானைக்கா, அங்குள்ள கோவில் சம்புகேஸ்வரம் எனப்படுகிறது. வன்னி குச்சியை எரித்து உருவான யாகத்தில் தோன்றியதால் வீர வன்னிய மகாராஜா என்று அழைக்கப்பட்டார். வன்னிய மகாராஜன் வழி வந்தவர்கள் வன்னியர்கள் என்பது வன்னிய புராணம் கூறும் செய்தி. இது வன்னிய நாடகம், வன்னிய கூத்து வடிவிலும் நடத்தப்படுகிறது. வன்னியராஜன் கோவில்களும் சில ஊர்களில் உள்ளன.
 வன்னிய நாடகம்
வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளை வன்னியர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். வன்னியர் குறித்த வன்னிய புராண தொன்மக் கதையை பரப்பவும், குழந்தைகளுக்கு படிப்பிக்கவும் வேண்டும்.

வரலாற்று அடையாளத்தின் தேவை என்ன?

ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு இனக்குழுவும் தம்மை ஒருங்கிணைத்து, அடிமைத் தளைகளில் இருந்து விடுதலையாக வரலாறும், அந்த குழுவின் தொன்மமும் முதன்மையான கருவிகளாக உதவுகின்றன. காலம் தோரும் வரும் ஆபத்துகளுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஒற்றுமை அவசியம் ஆகும்.

மனிதர்களின் மிகப்பெரிய பலம் அவர்கள் கூட்டாக செய்ல்படுவதுதான். ஒரு சிலர் அல்லது சில நூறு பேர்தான் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அறிமுகமாகி, கூட்டாக செயல்பட முடியும். அதே நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் நேரடியான அறிமுகத்தின் மூலம் தம்மை ஒரே குழுவாக அடையாளம் காண்பது சாத்தியம் இல்லை.

லட்சக்கணக்கான மக்களை 'நீயும் நானும் ஒன்று. உன்னுடைய நலனும் என்னுடைய நலனும் ஒன்று. நாம் இணைந்து ஒரே இலக்கில் பாடுபடுவோம்' என்கிற கூட்டுமனத்தை உருவாக்குவது வரலாற்று உணர்வும், தம்மை பிணைக்கும் தொன்மக் கதைகளும், அவற்றுக்கான அடையாள சின்னங்களும் தான்.

அக்னி வம்சம், அக்னி கலசம், மஞ்சள் - சிவப்பு நிறம் என்பது பல லட்சம் வன்னியர்களை ஓரணியாக உணரச் செய்யும் மாபெரும் அடையாளம் ஆகும். இந்த அடையாளத்தின் ஆணிவேறாக இருப்பது நெருப்பில் தோன்றிய வீர வன்னிய மகாராஜனின் கதை. 

வீர வன்னிய மகாராஜா அவதரித்த பங்குனி உத்திர திருநாளைக் வன்னியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.
குறிப்பு: வன்னியர்கள் மட்டுமல்ல. இதே போன்று, தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகமும் தது தொன்ம வரலாற்றுக் கதையை போற்ற வேண்டும்.  ஏனெனில், தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆபத்துகளான, ஏக இந்தியக் கொள்கை, மதவெறி தீவிரவாதம், தமிழர் அடையாள அழிப்பு, திராவிடத் திணிப்பு, கம்யூனிச சர்வதேசியம் ஆகிய கேடுகளில் இருந்து - பன்முக அடையாளங்களே தமிழகத்தை காப்பாற்றும். இதுவே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கும். தமிழகத்தின் புதிய தேசிய வாதம் என்கிற எழுச்சியின் ஆதாரமாக பன்முக அடையாளங்களே இருக்கும்.

Comments

  1. வன்னிய புராணம் எந்த நூற்றாண்டு எழுதபட்டது

    ReplyDelete
    Replies
    1. கி பி 10 ,12ஆம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் வீரப்பிள்ளை என்பவர் வன்னிய புராணத்தை இயற்றினார்

      Delete

Post a Comment

Popular posts from this blog

சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு

வீர வன்னியர்குல சத்திரியர்கள்